| வாடகை வீடு, வாடகை சைக்கிள், வெளியிடங்களுக்குப்போக கால் டாக்ஸி, பண்டிகை காலங்கள் எனில் ஸ்பீக்கர் செட், அலங்கார லைட்டுகள் என்று வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் எல்லாமே வாடகைக்குக் கிடைக்கிறது. இதுபோல் பணம் கொடுத்து சொந்தமாக வாங்கிக் கொள்ள முடியாத பல பொருட்களை வாடகைக்கு எடுப்பது நம் வழக்கம்.
ஆனால், இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்கவே முடியாதது அம்மா என்ற உறவு… கோடி ரூபாய் கொடுத்தாலும் கூட இந்த உறவை வாங்க முடியாது என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அந்தக் காலம் மலையேறிப் போச்சு என்றுதான் சொல்ல வேண்டும். `அம்மா’ என்ற தொப்புள் கொடி பந்தத்தைக் கூட பணமிருந்தால் வாங்கிவிடலாம் என்கிற அளவில்தான் இருக்கிறது இன்றைய மார்க்கெட் நிலவரம்.
ஆனால் என்னதான் இந்த வாடகைத் தாய் விஷயம், ஒரு மருத்துவ முன்னேற்றம் என்றாலும்கூட இதை நம் பெண்களால் முற்றிலும் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சமீபத்தில் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் `அரசி’ தொடரில்கூட ரஞ்சனி என்ற வாடகைத்தாய் கேரக்டரில் நடிகை காவேரி நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் குடும்பத்தினர் அனைவராலும் கைவிடப்பட்ட அவர், கண் தெரியாத தன் பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக வாடகைத்தாயாய் மாறினார். இந்தத் தொடரில் வரும் இந்த கதாபாத்திரம் இன்று பெண்கள் மத்தியில் பரபரப்புடன் பேசப்படும் ஒரு விஷயமாகிவிட்டது.
“புருஷன் தவிர்த்த வேறொரு ஆம்பளையோட குழந்தையை இப்படி இவ பெத்துத் தர்றா பாரேன்!” என்று பல பெண்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ரத்தமும் சதையும் தந்து உருவாக்கின குழந்தையை, இந்த தொப்புள் கொடி உறவை எப்படி வேறு யாருக்கும் தர மனசு வரும்? எப்படி மறக்க முடியும்? இனி பாசம்கிறதே அத்துப் போயிடும் போலிருக்கே! தாய்ப்பாசம்கிறது அவ்வளவுதானா?” என்று விமர்சனம் செய்தார்கள். படத்தில் ராதிகா கேரக்டர்கூட `வாடகைத்தாய்என்றால் என்ன…’ என்று விளக்கமாக எடுத்துச் சொல்லியும், பெண்கள் தங்கள் கலாச்சாரமாக நினைக்கும் ஒரு விஷயம் `காசுக்கு பிள்ளை’ பெற்றுக் கொடுப்பதன் மூலம் அடிபட்டுப் போவதால் இதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
என்னதான் இது மருத்துவ முன்னேற்றம் என்றாலும், என்னதான் குழந்தையில்லாத தம்பதியின் வாழ்க்கைக்கு செய்யும் உதவி என்றாலும்கூட நம் மிடிஸ்கிளாஸ் பெண்கள் மனநிலை இன்னும் உணர்வுபூர்வமாகத்தான் இருக்கிறது.
சரி, இந்த வாடகைத்தாய் என்ற விஷயத்தை சற்றே விஞ்ஞானப் பூர்வமாகப் பார்ப்போம்.
`குடும்ப உறவுகளில் பெரியளவில் உணர்வு பூர்வமாக இல்லாத மேலைநாடுகளில் இந்த வாடகைத்தாய் விஷயம் சகஜம் என்றாலும்கூட, இந்தியாவில் கடந்த சில வருடங்களாகத்தான் வாடகைத்தாய் விஷயம் ஓரளவுக்கு நடைபெற்று வருகிறது.
குழந்தையில்லாத எண்ணற்ற தம்பதியர்களின் தலையெழுத்தை மாற்றும் விஞ்ஞான முயற்சியாக நவீன மருத்துவ உலகம் பல விஷயங்களை முயற்சித்து வருகிறது. இதில் முதலாவது, செயற்கை முறை கருத்தரித்தல் என அழைக்கப்படும் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை முறை! அடுத்த முயற்சி வாடகைத்தாய்!
தனது விந்துவில் உயிரணுவின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்று கணவனும், சரியாக சினைமுட்டை சினைக்கவில்லை என்று மனைவியும் உடல்ரீதியான குறைபாடுகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும்போது, `டெஸ்ட் டியூப் பேபி’ என்ற மருத்துவமுறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதாவது கணவனின் வீரியமான உயிரணுவைத் தேர்ந்தெடுத்து மனைவியின் முட்டையோடு செயற்கையாக டெஸ்ட் டியூபில் சேர்த்து, பின் பெண்ணின் கருப்பையில் வைப்பது இது. அதே போல் மனைவிக்கு கருவை கருப்பையில் வைத்து தாங்கி வளர்க்கும் அளவுக்கு முடியாது எனும்போது, ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்றுத் தரும் வாடகைத்தாயாக மாற்றுகிறார்கள். இந்த வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உண்டு.
1. ஜஸ்டேஷனல் வாடகைத்தாய்:
அதாவது தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை தன்னுள் சுமப்பது. இதில் வெறுமனே கருப்பையில் சுமக்கும் பொறுப்பு மட்டுமே அந்தப் பெண்ணுக்கு. இதைத்தான் வாடகைத்தாய் என்கின்றனர்.
2. டிரெடிஷனல் வாடகைத்தாய். இந்த முறையில் வாடகைத்தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஐ.யூ.ஐ. முறை பின்பற்றப்படுகிறது. ஐ.யூ.ஐ. என்றால், ஆணின் விந்தணுவை பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துவது. அதாவது தம்பதியரில் அந்த மனைவியின் கருமுட்டையை பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழலில், வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே அந்தக் குழந்தை உருவாகப் பயன்படுகிறது!
வாடகைத்தாயின் பிரசவத்திலும் சரி, டெஸ்ட் டியூப் பேபி போன்ற மற்ற செயற்கை முறை கருத்தரிப்பு பிரசவத்திலும் சரி, இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சகஜம். இதற்கு என்ன காரணம்
இயற்கையான முறையில் ஒரு கரு உருவாகும்போது, பெண்ணுக்கு மாதாந்திரம் உருவாகும் ஒரேயொரு கருமுட்டையில் போய் உயிரணு சேர்கிறது. ஆனால் ஒரு பெண்ணின் கருமுட்டைப்பையில் செயற்கை முறையில் பல கருமுட்டைகளை உருவாக்கி, அவற்றை உறிஞ்சியெடுத்து, பின்பு அப்பெண்ணின் கணவனிடமிருந்து பெறப்படும் விந்துவையும் கலக்கச் செய்து அந்தக் கருவினை `பெண்ணின் செயற்கைகர்ப்பப்பை’ எனும் இயந்திரத்தினுள் வைத்து வளர வைப்பார்கள். 2-3 நாட்கள் கழித்து அதைப் பெண்ணின் கர்ப்பப்பையினுள்ளே செலுத்துவார்கள். இதுபோன்ற செயற்கை முறை சிகிச்சையை மேற்கொள்ளும்போது, ஒரேயொரு விந்தணுவையும் ஒரேயொரு கருமுட்டையை மட்டுமே பயன்படுத்த மாட்டார்கள். இரண்டு அல்லது மூன்று கருமுட்டையைப் பயன்படுத்துவார்கள். அப்படிச் செய்யும்போதுதான் இரட்டைக் குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் பிறக்க வாய்ப்பாகிறது. இது, சம்பந்தப்பட்ட தம்பதிக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைத் தருவதும் உண்டு. சில நேரங்களில் இப்படிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் புதிய பிரச்னையை ஏற்படுத்துவதும் உண்டு.
ஒரு குழந்தைக்குத் தானே பணம் தருகிறீர்கள். இரண்டு குழந்தைகளுக்கு இரண்டு மடங்கு பணம் தர வேண்டும்!” என்று பிரச்னை செய்வார்கள்.
வெளிநாடுகளில் மகளுக்காக குழந்தை பெற்றுத் தந்த அம்மாக்களும் உண்டு. அக்கா, தங்கைகளும் கூட தன் சகோதரிக்காக பெற்றுத் தருவதுண்டு! ஆனால், நம்மூரில் இந்த முறை ரொம்பக் கஷ்டம்.
நம் வீட்டில் ஒரு பையனுக்கோ, பெண்ணுக்கோ திருமணத்துக்கு வரன் தேடப் போனால் பார்ப்பது போலத்தான் வாடகைத் தாயையும் தேர்வு செய்கிறார்கள்.
தாய்மை என்ற உணர்வையும் மீறி பல பெண்கள் வாடகைத் தாயாக மாறுவதற்கு முதல் காரணம் `அரசி’யில் காட்டியது போல் பணத்தேவைதான்!
சமீபத்தில் ஜப்பான் தம்பதியருக்கு சூரத் நகரத்தில் உள்ள ஒரு பெண் வாடகைத் தாயாக இருந்த சம்பவத்தில் அவர் குழந்தை பெற்றபோது, அந்த ஜப்பான் தம்பதியருக்கு விவாகரத்தே ஆகிவிட்டது. குழந்தையை யார் வாங்கிக் கொள்வார்கள்? அப்பாவா? அம்மாவா? என்று கேள்வியும் எழுந்தது. ஆனால் இருவருமே குழந்தையை வாங்க முன்வரவில்லை. அக்குழந்தையின் ஒரிஜினல் அப்பாவின் அம்மா, அதாவது பாட்டிதான் வாங்கிக் கொள்ள ஜப்பானிலிருந்து சென்னை வந்திருக்கிறார். `என்ன கொடுமை சார் இது?’ என்ற டயலாக் கேட்கிறதா?
பணத்துக்காகத்தான் பல பெண்கள் இதைச் செய்ய முன் வருகிறார்கள் என்றால்… சரி, எத்தனை பணம் தருகிறார்கள் இந்த வாடகைத் தாய்க்கு?
கர்ப்ப காலத்திலிருந்து ஏற்படும் மருத்துவக் கட்டணம், பிரயாணச் செலவு, பொழுதுபோக்குக்காக டி.வி., டி.வி.டி பிரசவ காலத்திற்கு சில நாட்கள் தங்கும் வசதி என்று அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து விடுகிறார்கள். இது இல்லாமல் இவர்களது ஃபீஸ் என்பது இலட்சக்கணக்கில் வருகிறது.
ஒரு காண்ட்ராக்ட் போலத்தான் இந்த விஷயத்தை இரு தரப்பும் கையாள்கிறார்கள். இவ்வளவு பணம் தருவோம் என்று பேசி வக்கீல் மூலம் பாண்டு பத்திரத்திலும் எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். சாட்சிகளும் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்கள்.
சில நேரங்களில் ஒரு குழந்தை பிறப்பதற்கு பதிலாக இரட்டை குழந்தைகள் பிறந்தால் ரெண்டு மடங்கு பணம் தரணும் என்று சில வாடகைத்தாய்கள் ஒரிஜினல் தம்பதியருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதும் உண்டு. அப்போதுதான் வக்கீலிடம் போட்ட பாண்டு பத்திரம் உதவுகிறது. இதற்கு சட்டத்தில் இடமுண்டா என்றால், “இருக்கு” என்கிறார் உயர்நீதிமன்ற அட்வகேட் அசோசியேஷன் பிரசிடெண்ட் பால் கனகராஜ்.
“வாடகைத்தாய் முறையில் இரண்டு நபர்கள் ஒரு செயலை செயலாக்கம் செய்கின்றனர். இதில் தொய்வு ஏற்பட்டாலோ, பிரச்னை ஏற்பட்டாலோ பாதிக்கப்பட்ட நபர் நிச்சயம் உயர்நீதிமன்றம் செல்லலாம். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சம்பந்தப்பட்ட நபர் நீதி பெறலாம்” என்கிறார் இவர்.
குழந்தை பிறந்த பின், ஒப்பந்தப்படி அக்குழந்தையை ஒரிஜினல் அம்மாவுக்குக் கொடுக்கும் போது, அதைப் பெற்ற வாடகைத் தாயின் மனநிலை எப்படி இருக்கும்?
அந்த மருத்துவமனையில் பணிபுரியும் நண்பர் மூலம், சென்னையைச் சேர்ந்த ஒரு வாடகைத்தாயை நேரில் சந்தித்தோம். பெயர், ஊர் வெளியிடக் கூடாது என்று அவர் பேசினார்.
“என்னதான் பணம் வாங்கினாலும் பிள்ளையை உசிரோட தூக்கிக் கொடுக்கிறது ரொம்பக் கொடுமைதாங்க. கருவைச் சுமந்ததால் நான்தானேவாந்தி எடுத்தேன்? ஒவ்வொரு நாளும் அதை நான்தானே எனக்குள் வளர்த்தேன்? அதன் துடிப்பை உணர்ந்து நானும் துடித்தேன். அதுவெளிவரத் துடிக்கையில் நான்தானே வலி தாங்கினேன். குடும்பக் கஷ்டத்துக்காகத்தான் இந்த வேலை செஞ்சேன். சரி, நம்மால அவங்க குடும்பத்திலேயும் குழந்தை வந்து நிம்மதியாச்சுன்னு ஒரு திருப்தி வருது. மத்தபடி பெத்த குழந்தையைப் பிரியும் அந்த தினம் ரொம்பக் கொடுமைதாங்க!” என்றார் உணர்ச்சிப் பிழம்பாக!
- தி. அனுப்ரியா
சென்னையின் ஒரு பிரபல மருத்துவமனையின் ஊழியர் சொன்ன ஒரு தகவல் இது. நம்மிடம் அவர் மருத்துவமனை பெயரையும் அவர் பெயரையும் வெளிப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒரு பெண் வாடகைத்தாய்
ஆன கதை: 1
ஒருவருக்கு இரண்டு மனைவிகள். அவர் தனது முதல் மனைவியையும் அந்த மனைவி மூலம் பிறந்த மகளையும் கைவிட்டுவிட்டார். அந்த முதல் மனைவிக்கு இதயத்தில் கோளாறு. செலவு நிறைய ஆனது. இரண்டே பெண்கள் எப்படி சமாளிப்பது? இந்த நேரத்தில் அம்மாவைக் காப்பாற்ற மகள் எடுத்த முடிவுதான் வாடகைத்தாய் ஆவது!
ஒரு பெண்
வாடகைத்தாய்
ஆன கதை: 2
அந்தப் பெண்ணின் கணவர் இரண்டு கிட்னிகளும் செயல்திறன் இழந்து மோசமான உடல்நிலைக்குத் தள்ளப்பட்டார். கணவரின் உயிரையும் தன் தாலி பாக்கியத்தையும் காப்பாற்ற வாடகைத் தாயானார். அந்தப் பெண்!
ஒரு ஷாக் தகவல்
ஷாக்கடிக்க வைக்கும் மற்றொரு செய்தியும் உண்டு. பணக்கார பெண்களைப் போன்று, தாராளமாக செலவு செய்ய லட்சக்கணக்கில் பாக்கெட் மணி வேண்டும் என்பதற்காகவும் வசதியான வாழ்க்கைக்காகவும் சில கல்லூரிப் பெண்களே வாடகைத்தாயாக இருக்க முன்வருகிறார்கள் என்கிறார்கள்.
ஒரு வருட டிப்ளமோ படிப்பு என்று பெற்றோரிடம் பொய் சொல்லி தங்கள் வீடுகளை விட்டு வெளியூரில் தங்கி, உதாரணத்திற்கு சென்னையிலிருந்து பெங்களூர் வாடகைத் தாயாக மாறுகிறார்கள்.
மருத்துவத் துறையில் எவ்வளவோ அட்வான்ஸ்டு டெக்னாலஜிகள் வந்துவிட்டதால், அதன் உதவியோடு அந்த மாணவி, வாடகைத்தாயான சுவடுகளே தெரியாமல் மறைக்கப்படுகிறது |
நவம்பர் 11, 2008 at 8:32 பிற்பகல்
பின்னுட்டம் இடுங்கள் நண்பர்களே
நவம்பர் 13, 2008 at 12:07 பிற்பகல்
தகவல்கள் நன்று
நவம்பர் 15, 2008 at 3:50 பிற்பகல்
IT is regular to abroad. But Indian Cultural is very ancient, But money make all, So Womens converted to machine in this matter. But In this situation is very very bad. What can they do?. What is the solution remove this problem?. Our Govt no action in this problem yet I know.
நவம்பர் 22, 2008 at 1:40 பிற்பகல்
நன்றாக எழுதுகிறீர்கள்.
நீங்கள் இது போன்ற கட்டுரைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாமே?
நவம்பர் 22, 2008 at 5:10 பிற்பகல்
nanri veyilaan avarkalukku